மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ‘விரிமேனா கோடா’ கடைத்தொகுதி. 2007ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அதில் கிட்டத்தட்ட 150 கடைகள் அமைந்திருக்கின்றன.
சனிக்கிழமை அங்கு வெந்நீர்க்குழாய் ஒன்று வெடித்ததில் நான்கு பேர் மாண்டதாகவும் மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் மேயர் செர்கி சோபியானின் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் நெருக்கடி நேரச் சேவையாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
அம்மோனியா கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டதாகவும் ஆனால் அம்மோனியா கசியவில்லை என்றும் விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான காணொளியில் கடைத்தொகுதி முழுவதும் வெள்ளம்போல் நீர் சூழ்ந்திருப்பதையும் கதவு வழியாக நீராவி வெளியேறுவதையும் காணமுடிகிறது.
“பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது,” என்று மேயர் சோபியானின் கூறினார்.

