பெய்ஜிங்: சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு வாங் யி, மற்ற நாடுகளுடனான பங்காளித்துவத்தை மேம்படுத்தவும் சீனாவின் இறையாண்மையைக் கட்டிக்காக்கவும் உறுதி அளித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் அவரது கருத்து வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய சின் காங் ஒருமாத காலமாகப் பொதுவெளியில் காணப்படவில்லை. அதையடுத்து சீன அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திரு வாங் யி புதிய வெளியுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் முக்கியமாகக் கருத்துரைத்திருப்பது இதுவே முதல்முறை.
உடல்நலக் குறைவால் திரு சின் பணியில் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியது. அதுகுறித்த மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
திரு வாங் யி, ஏற்கெனவே 2013 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சீனாவின் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியவர்.
சீனாவின் மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தில் இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார்.