தோக்கியோ: கானுன் சூறாவளி இப்போது தென்கொரியாவைத் தாக்கியுள்ளது.
கானுன் சூறாவளியால் வியாழக்கிழமையன்று ஜப்பானின் தெற்குப் பகுதியில் கடும் மழை பெய்தது. அந்நாட்டின் சில பகுதிகளில் பொதுவாக ஆகஸ்ட் மாதம் காணப்படாத அளவு மழை நீர் சேர்ந்தது.
அதற்குப் பிறகு சூறாவளி தென்கொரியாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றது.
ஜப்பானின் கியூஷூ தீவுக்கும் கொரிய தீபகற்பத்துக்கும் இடையிலான பகுதிவழி கானுன் சென்றுகொண்டிருந்தது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. 330க்கும் அதிகமான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 10,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாண்டின் ‘வோர்ல்ட ஸ்கவுட் ஜம்போரி’ எனும் சாரணர் நிகழ்ச்சி தென்கொரியாவில் நடைபெறுகிறது. கானுன் சூறாவளியால் அந்த நிகழ்ச்சியின் வெளிப்புற நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
ஆண்டுதோறும் நடைபெறும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் சாரணர்கள் தென்கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் முகாமிட்டிருந்தனர். அதிலிருந்த சுமார் 37,000 சாரணர்கள் வெளியேற்றப்பட்டனர்.