பெய்ஜிங்: சூழலுக்கேற்ப மிக வேகமாகத் தகவமைத்துக்கொள்ளும் பாசி வகை உயிரினம் ஒன்று, பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலைக்குத் தாக்குப்பிடிக்காமல் அழியும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘டகாகியா லெபிடொஸியோய்ட்ஸ்’ எனப்படும் பாசி வகை, ஏறக்குறைய 165 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் காணப்படுகிறது. தற்போது அமெரிக்கா, ஜப்பான், திபெத் போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும் இது, டைனோசர்கள் அழிவைச் சந்தித்தபோதுகூட பூமியில் தாக்குப்பிடித்தது.
ஆனால், பருவநிலை மாற்றத்தால் வனப்பகுதிகளில் அது அழிந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலை 2100ஆம் ஆண்டில் இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், ‘டகாகியா’ பாசி உயிர்வாழும் இடம் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே அதனைக் காணமுடியும்.
வெப்பநிலை மிகவும் அதிகரித்தால் ‘டகாகியா’ பாசி அழிந்துபோகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பல்லுயிர்ச் சூழல் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றும் கடமை மனிதர்களுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அருகிவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை அவர்கள் எடுத்துரைத்தனர்.


