பேங்காக்: தாய்லாந்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க 11 கட்சிகளைக் கொண்ட கூட்டணியை ஃபியு தாய் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளில் அந்நாட்டின் ராணுவ ஆதரவு கட்சிகளும் அடங்கும்.
அடுத்த அரசாங்கத்தை அமைக்க பல கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராய் இருப்பதாக ஃபியு தாய் முன்னதாகக் கூறியிருந்தது.
தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற ஒரு நாள் எஞ்சியிருக்கும் வேளையில் ஃபியு தாய் கட்சியின் அறிவிப்பு வந்துள்ளது.
தாய்லாந்தில் இவ்வாண்டு மே மாதம் 14ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து புதிய அரசாங்கம் அமைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் எழுந்து வந்துள்ளன.
பொதுத் தேர்தலில் மூவ் ஃபார்வர்ட் கட்சி முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தில் ஃபியு தாய் வந்தது.
தேர்தலில் பழமைவாத, ராணுவ ஆதரவு வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான போட்டியில் இவ்விரு கட்சிகளும் சிறப்பாகச் செய்தன.
தேர்தலுக்கு முன்பு ஒன்பது ஆண்டுகளாக தாய்லாந்து ராணுவ ஆட்சியில் அல்லது ராணுவ ஆதரவு கட்சிகளின்கீழ் இருந்தது.
2006, 2014 பொதுத் தேர்தல்களில் ஃபியு தாய் கட்சி தோற்கடிக்கப்பட்டது.

