தைப்பே: சீனாவைச் சேர்ந்த 28 போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமையன்று தைவானைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்ததாக தைவானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்தப் போர் விமானங்களில் பல தைவானின் நீர் எல்லைக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் வெளியிடப்படாத தொலைதூர நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று காணப்பட்ட சீனாவின் போர் விமானங்களில் 20, தங்களின் நீர் எல்லைப் பகுதிகளுக்குள் வந்ததுடன் தென்கிழக்கு, தென்மேற்குப் பகுதிகளில் இருக்கும் தங்களின் ஆகாயத் தற்காப்பு வட்டாரங்களுக்குள் நுழைந்ததாக தைவானிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. தொலைதூர பயிற்சிகள் என்றழைக்கப்படும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
காவல் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டு நிலைமையைக் கண்காணிப்பதாகவும் அமைச்சு சொன்னது. சென்ற வாரம் சீனாவின் போர்க் கப்பல்களும் விமானங்களும் அதிக முறை தங்களின் எல்லைகளுக்குள் நுழைந்ததாக தைப்பே தெரிவித்திருந்தது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் செப்டம்பர் மாதம் தைவான் நீரிணை வழியாகச் சென்றன. அதைத் தொடர்ந்து தனது படைகள் மிகுந்த விழிப்புநிலையில் இருப்பதாக பெய்ஜிங் கூறியிருந்தது.