கியவ்: பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரேனியத் தலைநகர் கியவில் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து, உக்ரேனின் ஆகாயத் தற்காப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பேசியதாக அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
ஷாப்ஸ் சென்ற மாதம் தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, உக்ரேனியத் தலைநகருக்கு மேற்கொண்டுள்ள முதல் வருகை இது. ரஷ்யா 2022 பிப்ரவரி மாதம் உக்ரேனுக்கு எதிராகப் படையெடுத்துச் சென்ற நாளிலிருந்து உக்ரேனுக்கு பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது.
“ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில், எங்களுக்காக நீங்கள் செய்யும் அனைத்திற்கும் எனது நன்றி. உங்களது ராணுவ, நிதி, மனிதாபிமான உதவிக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உங்களைச் சார்ந்திருக்க முடிவதை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்,” என்று ஸெலென்ஸ்கி சந்திப்பின்போது கூறியதாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுக்கும் இடையிலான தற்காப்புத்துறை ஒத்துழைப்பு பற்றி ஸெலென்ஸ்கி பேசினார். போர்க்களத்தில் உக்ரேன் தனது ஆற்றலைப் பெருமளவு விரிவுபடுத்துவதற்கு நெடுந்தூரம் பாயும் ஆயுதங்கள் உதவியதாக அவர் கூறினார்.
பிரிட்டன் இந்த ஆண்டு “ஸ்டார்ம் ஷேடோ” ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்கியது. ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் வட்டாரங்களில் தாக்குதல் நடத்த இந்த ஏவுகணைகள் துணைபுரிந்தன.
ரஷ்யா குளிர்காலத்தில் நெடுந்தூரம் பாயும் ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பயன்படுத்தி முக்கிய எரிபொருள் உள்கட்டமைப்புகளைக் குறி வைக்கக்கூடும் என்ற அச்சத்தால், உக்ரேனின் ஆகாயத் தற்காப்பை வலுப்படுத்துவது பற்றி பிரிட்டிஷ் அமைச்சரும் உக்ரேன் அதிபரும் உரையாடியதாக அறிக்கை தெரிவித்தது.