சோல்: காஸாவில் பலர் ரத்தம் சிந்தக் காரணமாயிருப்பதாக இஸ்ரேலை வடகொரியா சாடியுள்ளது.
வடகொரிய அரசாங்க ஊடகம் அவ்வாறு கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கும் இடையிலான மோதல் குறித்து பியோங்யாங் கருத்துரைத்திருப்பது இதுவே முதல்முறை.
வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, இஸ்ரேலில் நிலவும் சர்ச்சை குறித்தும் அங்கு நேர்ந்த உயிரிழப்புகள் குறித்தும் ‘ரோடோன் சின்முன்’ செய்தித்தாள் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
“இஸ்ரேல், பாலஸ்தீன மக்கள்மீது தொடர்ந்து குற்றச்செயல்களை மேற்கொள்வதன் எதிரொலியாகத்தான் இந்த மோதல் மூண்டுள்ளதாக அனைத்துலகச் சமூகம் கருதுகிறது. தனி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதே இதற்கான அடிப்படைத் தீர்வாக அமையும்,” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் குழுவின் தாக்குதலில் கிட்டத்தட்ட 1,500க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து அனைத்துலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் வேளையில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.