பேங்காக்: இஸ்ரேலில் வேலைபார்க்கும் தாய்லாந்து ஊழியர்கள் முதல் கட்டமாக வியாழக்கிழமை தாய்லாந்து திரும்புவர் என்று தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பிபாட் ரட்சகித்பிரகர்ன் திங்கட்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலைத் தொடந்து தாய்லாந்து அரசு, அந்நாட்டு ஊழியர்களை மீட்டுக்கொள்ளத் தொடங்கியுள்ளது.
வெளியுறவு, தொழிலாளர் அமைச்சுகள் அங்குள்ள தாய்லாந்து நாட்டவர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்ப பாடுபட்டு வருவதுடன் அவர்களை தாய்லாந்திற்கு திருப்பியழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திரு பிபாட் கூறினார்.
15 ஊழியர்கள் இரண்டு விமானங்களில் பேங்காக் திரும்புவர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான மோதலில் 18 தாய்லாந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டதாக தாய் அரசாங்கம் கூறியது.
ஒன்பது தாய்லாந்து நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 11 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. பிணைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கூறியது.
கிட்டத்தட்ட 5,000 தாய்லாந்து நாட்டவர்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக திரு ஜக்கபோங் கூறினார்.
இஸ்ரேலில் ஏறக்குறைய 30,000 தாய்லாந்து நாட்டவர்கள் பணிபுரிகின்றனர். பலர் விவசாயத் துறையில் வேலை செய்கிறார்கள் என்று தாய்லாந்து தொழிலாளர் அமைச்சு கூறியது.

