கெய்ரோ: ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்தை இஸ்ரேல் சூறையாடி வருகிறது. இருந்தாலும் காஸாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டன என்று நேற்று காலை தகவல் வெளியானது.
ஆனால் காஸா வட்டாரத்தில் தரை வழியாக ஊடுருவும் முயற்சியுடன் இஸ்ரேல் நேற்று தாக்குதலை தீவிரமாக்கியதால் அந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வரவில்லை.
முன்னதாக தெற்கு காஸாவில் காலை 6.00 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணி) போர் நிறுத்தப்படும் என்றும் ராஃபா எல்லைப் பகுதி திறக்கப்படும் என்றும் திங்கட்கிழமை எகிப்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மூன்று நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ராஃபா எல்லை பிற்பகல் இரண்டு மணி வரை திறந்திருக்கும் (சிங்கப்பூரில் காலை 10.00 மணி) என்று தெரிவிக்கப்பட்டது.
ராஃபா, எகிப்தின் சினாய் தீபகற்பத்துக்கும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா வட்டாரத்துக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியாகும். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்தப் பாதை வழியாகத்தான் மக்கள் வெளியேற வேண்டும்.
இஸ்ரேல்-ஹமாஸ் ஒன்பது நாள் போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இரவு முழுவதும் இஸ்ரேல் கடுமையாகத் தாக்கியது என்று ஹமாஸ் ஆட்சியில் உள்ள காஸா வட்டாரவாசி ஒருவர் தெரிவித்தார்.
பல வீடுகள் தரைமட்டமாயின. மேலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் என்றார் அவர்.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
ஹமாஸின் பல ஆயிரம் ஏவுகணைத் தாக்குதலில் ஒரே நாளில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதற்கு இஸ்ரேல் பதிலடி தந்ததில் காஸாவில் குறைந்தது 2,750 பேர் உயிரிழந்தனர். 10,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 10,000 பேர் காணாமல் போயினர்
இதற்கிடையே உதவிப் பொருள்கள் பாலஸ்தீன மக்களுக்கு விநியோகிக்க அரசதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காஸாவில் உதவிப் பொருள்களை விநியோகிக்கவும் வெளிநாட்டவர்கள் வெளியேறவும் ஓர் உடன்பாடு காணப்பட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் கெய்ரோ பயணத்துக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் போரை நிறுத்த மூன்று நாடுகள் ஒப்புக்கொண்டது குறித்து இஸ்ரேலிய ராணுவமும் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதகரமும் உடனடியாக தகவல் எதையும் வெளியிடவில்லை.
ஒரு மில்லியனுக்கும் மேலானோர், அதாவது காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதியளவு மக்கள் வீடிழந்து தவிக்கின்றனர். அவர்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே மிகுந்த சிரமப்படுகின்றனர் என்று ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.