லெபனானுக்குப் பயணம் மேற்கொள்வதை ஒத்திவைக்குமாறும் அங்கு இருப்பவர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து புறப்படுமாறும் வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
லெபனானில் இருக்க முடிவெடுப்போர் தொடர்ந்து விழிப்புடன் இருந்து உள்ளூர் நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து லெபனான் அரசாங்கத்தின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்களைத் தவிர்க்கும்படியும் சிங்கப்பூரர்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியது.
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் செவ்வாய்க்கிழமை பூசல் தீவிரமடைந்தது. காஸா மருத்துவமனை வெடிப்புக்குக் கண்டனம் தெரிவித்த லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்மீது பழி சுமத்தியது. பெய்ரூட் புறநகர்ப் பகுதியான அவ்காரில் அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே லெபனான் பாதுகாப்புப் படைகளுடன் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மோதினர். இந்நிலையில், லெபனானில் உள்ள சிங்கப்பூரர்கள், அமைச்சுடன் மின்பதிவு செய்துகொள்ளும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.