டெல் அவிவ்/காஸா: மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீனர்களிடம் சென்றடைவதற்கு வழிவகுக்க, காஸா பகுதி உடனான எல்லையை மீண்டும் திறக்க எகிப்து இணங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காஸாவில் மனிதநேய நெருக்கடி மோசமடைந்திருப்பதும் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் விரிவடைந்துள்ள வேளையில் இந்த அறிவிப்பு வெளியானது.
காஸாவில் அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. வெடிப்பில் 471 பேர் கொல்லப்பட்டதாகக் கூறிய பாலஸ்தீன அதிகாரிகள், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலே அசம்பாவிதத்துக்குக் காரணம் என்றனர்.
காஸாவில் இயங்கும் ‘பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்’ அமைப்பினர் பாய்ச்சிய எறிபடை மருத்துவமனை மீது தவறுதலாக விழுந்ததே வெடிப்புக்குக் காரணம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கூறின. ஆனால், அந்த அமைப்பினர் அதற்குப் பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.
காஸா மருத்துவமனை வெடிப்பில் “சில டஸன் பேர் கொல்லப்பட்டனர்” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லியோர் ஹயாத் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்திருந்த எண்ணிக்கையைவிட இது கணிசமாகக் குறைவாகும்.
மருத்துவமனை வெடிப்பின் எதிரொலியாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரை, ஈரான், ஜோர்தான், லெபனான், துனீசியா உட்பட மத்திய கிழக்கின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
மேற்குக் கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பாலஸ்தீன பதின்மவயதினர் இருவரை இஸ்ரேலியப் படையினர் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர். லெபனானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே எறிபொருள்களை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதுடன் தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டு தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை சந்தித்துவிட்டு விமானத்தில் அமெரிக்கா திரும்பிக்கொண்டு இருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எகிப்திய அதிபர் அப்டல் ஃபத்தாஹ் அல்-சிசியுடன் புதன்கிழமை இரவு தொலைபேசியில் பேசினார். காஸாவுக்கான உதவிகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.
இந்நிலையில், எகிப்து-காஸா இடையேயான ராஃபா எல்லையைத் திறக்க திரு சிசி இணக்கம் தெரிவித்ததாக திரு பைடன் செய்தியாளர்களிடம் கூறினார். இதன்மூலம் மனிதாபிமான உதவிப் பொருள்களை ஏந்திய சுமார் 20 டிரக் வாகனங்கள் காஸாவுக்குள் நுழைய முடியும்.
ராஃபா எல்லைத் திறப்புக்கான காலவரிசையை திரு பைடன் குறிப்பிடாதபோதிலும் சாலைப் பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன் வரும் நாள்களில் எல்லை திறக்கப்படும் என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
காஸாவிலும் மேற்குக் கரையிலும் குடிமக்களுக்கு US$100 மில்லியன் (S$136.8 மி.) பெறுமானமுள்ள உதவிகளை வழங்க திரு பைடன் உறுதியளித்துள்ளார்.