நியூயார்க்: தன் மீதான சிவில் மோசடி வழக்கு விசாரணையின் போது, நீதிபதியின் நிர்வாகப் பணியாளரைத் தாக்கி டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
அது முன்னாள் அதிபரான டிரம்ப்பின் ‘ட்ருத் சோஷியல்’ இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டபோதும் டிரம்ப்பின் 2024 பிரசார இணையத்தளத்தில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இருந்தது.
பதிவை அகற்றுமாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அது அகற்றப்படவில்லை என்று நீதிபதி ஆர்தர் எங்கோரோன் கூறினார். இதையடுத்து தடை உத்தரவை மீறியதற்காக டிரம்ப்புக்கு அபராதமாக 5,000 அமெரிக்க டாலர் (S$6,800) விதிக்கப்பட்டது.
அத்துடன் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழ்ந்தால் சிறைத் தண்டனை உட்பட ‘மேலும் கடுமையான’ தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி.

