பேங்காக்: சிறையில் இருக்கும் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவத்ர கடந்த சில வாரங்களில் இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
74 வயது தக்சின், 2006ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டார். 15 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்த அவர் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நாடு திரும்பினார்.
திரு தக்சின்மீது ஏற்கெனவே ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றின் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அதனால் நாடு திரும்பிய உடனேயே அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
தாய்லாந்து வந்தவுடன் உடல்நலக் குறைவு காரணமாக திரு தக்சின் காவல்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் மாதம் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக அவரின் மகள் கூறினார்.
அதனையடுத்து திங்கட்கிழமையன்று திரு தக்சின் ஐந்து மணிநேரம் நீடித்த மேலும் ஓர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

