பெய்ஜிங்: சீனாவின் முன்னாள் பிரதமர் லி கிசியாங் மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை மாண்டார்.
பதவியில் இருந்து ஓய்வு பெற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் திரு லி 68வது வயதில் காலமானார்.
திரு லி, சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைத்துவப் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் முக்கியமான ஒருவர் என்று முன்பு கருதப்பட்டதுண்டு.
ஆனால், அவரை இப்போதைய சீன அதிபர் ஸி ஜின்பிங் அண்மைய ஆண்டுகளாக ஓரங்கட்டிவிட்டார்.
முன்னாள் பிரதமர் லி மிகவும் திறந்த நிலையிலான சந்தைப் பொருளியலை ஆதரித்தவர். பொருள், சேவை விநியோகத் துறையில் சீர்திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.
அவருடைய சித்தாந்தத்திற்கு ‘லிக்கோனாமிக்ஸ்’ என்று பெயர்.
ஆனால், அவருடைய அணுகுமுறைகள் ஒருபோதும் நடைமுறைக்கு வராமலேயே போய்விட்டன.
திரு லி கிசியாங் அண்மைய சில நாள்களாக ஷாங்காய் நகரில் தங்கி இருந்தார். திடீரென அக்டோபர் 26ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஷங்காயில் மரணமடைந்துவிட்டார் என்று சீனாவின் அரசாங்க ஒளிபரப்புச் சாதனம் தெரிவித்தது.

