புதுடெல்லி: மத்திய கிழக்கு காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசியுடன் பேசினார்.
தலைவர்கள் இருவரும் பயங்கரவாதம் தொடர்பிலான கவலையைப் பகிர்நதுகொண்டதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் மோடி, எகிப்திய அதிபருடன் தான் நடத்திய பேச்சு பற்றிய விவரங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
மத்திய கிழக்குப் போரில் குடிமக்கள் கொல்லப்படுவது குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர்.
‘‘மத்திய கிழக்கில் மனிதாபிமான சூழ்நிலை மோசமடைகிறது. இது பற்றி எகிப்திய அதிபருடன் கலந்து பேசினேன். அந்தப் பகுதியில் உடனடியாக அமைதியும் நிலைப்பாடும் திரும்ப வேண்டும்.
‘‘மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் இணக்கம் கண்டோம்,’’ என திரு மோடி தெரிவித்தார்.

