வாஷிங்டன்: மத்திய கிழக்கில் உள்ள காஸா பகுதி ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் பட்சத்தில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதன் தொடர்பில் அமெரிக்காவும் இதர நாடுகளும் பலதரப்பட்ட வாய்ப்புகள் பற்றி ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் நியமனக் குழு விசாரணையில் பேசிய அமைச்சர், காஸா பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் தொடர இயலாது என்று தெரிவித்தார்.
அதேவேளையில், காஸாவை நிர்வகிக்க இஸ்ரேலும் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
இத்தகைய சூழலில் இதர பல அம்சங்கள் பற்றி அமெரிக்காவும் இதர நாடுகளும் இப்போது மும்முரமாக யோசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
“ஆற்றல்மிக்க, புத்துணர்ச்சியுடன் கூடிய பாலஸ்தீன நிர்வாகம் காஸாவில் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பது பற்றி முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அது சாத்தியமா என்பதுதான் தெரியவில்லை,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“அது முடியாமல் போனால் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற பல நாடுகளை உள்ளடக்கி தற்காலிகமாக இடம்பெறக்கூடிய இதர ஏற்பாடுகள் பற்றியும் பேச்சு நடக்கிறது.
“காஸாவின் பாதுகாப்பு, ஆளுமைக்கு உதவக்கூடிய வகையில் அனைத்துலக அமைப்புகளும் அத்தகைய ஏற்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது,” என்றும் அமெரிக்க அமைச்சர் கூறினார்.
இப்போதைய போரில் இஸ்ரேலுக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் காஸாவை எப்படி நிர்வகிக்கலாம் என்பது பற்றி இஸ்ரேல், அரபு நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது.
ஆனால் தெளிவான திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, அமெரிக்க வீரர்கள் உள்ளிட்ட பல நாட்டு ராணுவத்தை காஸாவில் நிறுத்துவது பற்றி அல்லது காஸாவை ஐநா நிர்வாகத்தின் கீழ் தற்காலிகமாக இடம்பெறச் செய்வது குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் விவாதித்து வருவதாக புளூம்பர்க் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இவ்வேளையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், வெள்ளிக்கிழமை இஸ்ரேல் செல்கிறார் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்திவிட்டு அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்வார் என்றும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சு அறிவித்தது.