காஸா/ஜெருசலம்: காஸாவில் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தக் கோரி இஸ்ரேலுக்கு நெருக்குதல் தர, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்றார்.
அதே நேரம் காஸாவின் ஆகப்பெரிய நகரான காஸா சிட்டியை இஸ்ரேலிய ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர்.
காஸாவில் உள்ள ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை ஒழிக்காமல் போரை நிறுத்தப் போவதில்லை என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ள நிலையில் திரு பிளிங்கன் டெல் அவிவ் சென்றார்.
காஸா மக்களின் நலன் கருதி திரு பிளிங்கன் இஸ்ரேலியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, காஸா மீதான தாக்குதல் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்வதை நிறுத்த மாட்டோம் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காஸாவின் முக்கியப் பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் முன்னேறி வருகின்றன. ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது ஹமாஸ் எதிர்தாக்குதல் நடத்துகிறது. அதில் 18 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் மாண்டனர்.
இந்நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள ஆர்வலர்கள் குரல்கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
காஸாவில் உள்ள 35க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் போதிய வசதிகள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.
அகதிகள் முகாம்கள் அருகேயும் மருத்துவமனைகள் அருகேயும் இஸ்ரேல் குண்டு போடுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டதோடு பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
காஸாவில் மக்கள் ஏற்கெனவே உணவு, தண்ணீர், மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
போரால் இதுவரை 9,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.