ஷாங்காய்: ஐந்து ஆண்டுகால வடிவமைப்பு, கட்டுமானம், சோதனைப் பயணங்களைத் தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஆகப் பெரிய சொகுசுக் கப்பலான ‘அடோரா மேஜிக் சிட்டி’யை சீனா சனிக்கிழமை ஷாங்காயில் அறிமுகப்படுத்தியது. அதன் முதல் பயணம் 2024 ஜனவரி 1ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
323.6 மீட்டர் நீளமும் 135,500 டன் எடையும் கொண்ட அந்த சொகுசுக் கப்பலில் 5,246 பயணிகள் வரை தங்க முடியும். மொத்தம் 2,125 அறைகள் உள்ளன.
16 மாடிகளைக் கொண்ட இந்தக் கப்பலில் மொத்தம் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் வசிப்பிட, பொழுதுபோக்கு பகுதி உள்ளது.
விமானந்தாங்கிக் கப்பல், பெரிய திரவ இயற்கை எரிவாயுக் கப்பல், மிகப் பெரிய சொகுசுக் கப்பல் ஆகிய சவால்மிக்க கப்பல் கட்டுமானத் திட்டங்களை சீனா திறம்பட நிறைவேற்றியுள்ளது என்று சீன மாநில கப்பல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


