ஈராண்டுகளாக ஸ்காட்லாந்தின் மலைப்பாறை அடிவாரத்தில் தன்னந்தனியாகத் தவித்த செம்மறியாடு அண்மையில் மீட்கப்பட்டது.
அதன் கம்பளி வெட்டப்பட்டதைத் தொடர்ந்து, அது மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறது.
ஃபியோனா எனப் பெரியடப்பட்டுள்ள அந்த ஆட்டின் உரோமம் முழுவதையும் மீட்புப் பணியாளர்கள் வெட்டினர்.
அவர்களில் ஒருவரான திரு கேம்மி வில்சன், “ஃபியோனா அற்புதமானது. அதன் கம்பளியை நாங்கள் வெட்டி முடிக்கும்வரை அது அசையாமல் அமர்ந்திருந்தது. இதைப்போன்ற அமைதியான செம்மறியாட்டை நான் இதுவரை கையாண்டதே இல்லை,” என்று ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை பதிவிட்டார்.
ஆட்டு உரோமத்தின் எடையை அவர் வெளியிடவில்லை என்றபோதிலும், பிரிட்டிஷ் கம்பளி நிறுவனத்துக்கு அது அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்மூலம் தயாரிக்கப்படும் பொருளைக் கொண்டு அறக்கொடைக்காக நிதி திரட்டலாம் என்றார் அவர்.
2021ல் படகோட்டத்தின்போது திருவாட்டி ஜிலியன் டர்னர் என்பவர் ஃபியோனாவை முதன்முறையாகக் கண்டறிந்தார். அண்மைய படகோட்டத்தின்போது அதே இடத்தில் அதே செம்மறியாட்டைக் கண்டு அவர் அதிர்ச்சியுற்றார்.
“குறைந்தது ஈராண்டுகளாக இந்த ஆடு தன்னந்தனியாக இருந்தது. அது எவ்வளவு பெரிய கொடுமை! நாங்கள் அதைக் கடந்து சென்ற இரண்டு தருணங்களில் எங்களிடம் வர தீவிரம் காட்டியது,” என்றார் திருவாட்டி டர்னர்.
இந்த ஆட்டை பிரிட்டிஷ் செய்தித்தாள்கள் ‘பிரிட்டனின் தன்னந்தனியான செம்மறியாடு’ என வருணித்தன. அதையடுத்து விலங்குநல ஆர்வலர்கள் இந்த ஆட்டை விடுவிக்க அறைகூவல் விடுத்தனர்.
ஃபியோனா ஒருவழியாக மீட்கப்பட்டுவிட்டது குறித்து பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், ஃபியோனா இருக்கும் ஆட்டுப் பண்ணைக்கு வெளியே விலங்குநல ஆர்வலர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஃபியோனாவை ஆட்டுப் பண்ணையில் வைப்பதால் அது காட்சிப் பொருளாக பார்க்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.