ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலின் முன்னணி வேட்பாளரான பிரபோவோ சுபியாந்தோ, தனது நாடு வெளிநாட்டு உறவுகளில் நடுநிலையுடன் நடந்துகொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.
எந்தவொரு பெரிய நாடுகளுக்கும் அல்லது ராணுவக் கூட்டணிக்கும் ஆதரவாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் பிரபோவோ சுபியாந்தோவின் கருத்து வெளியாகியுள்ளது.
“வெளியுறவுக் கொள்கையில் நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என்றார் அவர்.
“ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும் அது பெரிய எண்ணிக்கை அல்ல. ஆனால் ஒரு விரோதி இருந்தால்கூட அது அதிகம்,” என்று திங்கட்கிழமை அன்று ஜகார்த்தாவைத் தளமாகக் கொண்ட உத்திபூர்வ, அனைத்துலக சிந்தனை நிலையத்தில் பேசியபோது தனது வெளியுறவுக் கொள்கையை அவர் விளக்கினார்.
2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரபோவோ சுபியாந்தோ முன்னணியில் இருக்கிறார்.
“நாங்கள் சுதந்திரமான கொள்கையைப் பின்பற்ற விரும்புகிறோம். எந்தவொரு ராணுவ கூட்டணிக்கும் ஆதரவாக இருக்க விரும்பவில்லை. எந்தவொரு புவியரசியலிலும் பங்கேற்க விருப்பமில்லை. நாங்கள் அனைத்துப் பங்காளிகளிடமும் அனைத்து நாடுகளிடமும் குறிப்பாக அண்டை நாடுகளிடமும் எங்களுடைய வட்டார நாடுகளிடமும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்,” என்று அனைத்துலக தூதர்கள், ஆய்வாளர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் 72 வயது தற்காப்பு அமைச்சருமான பிரபோவோ தெரிவித்தார்.
இந்தோனீசியா, எந்தவொரு நாட்டுடனும் அதிகாரபூர்வ ராணுவக் கூட்டணியை வைத்திருக்கவில்லை.
அக்டோபர் 27க்கும் நவம்பர் 1க்கும் இடையே யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் திரு பிரபாவோ மற்ற வேட்பாளர்களைவிட முன்னணியில் இருந்தார்.
முன்னாள் ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரானோவோ, முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனிஸ் பஸ்வெடான் ஆகியோர் அதிபர் தேர்தலில் களத்தில் இருக்கும் இதர வேட்பாளர்கள்.
ஆய்வில் பங்கேற்ற 1,220 பேரில் சுமார் 39.7 விழுக்காட்டினர் பிரபோவோவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். திரு கஞ்சாருக்கு 30 விழுக்காட்டினரும் திரு அனிசுக்கு 24.4 விழுக்காட்டினரும் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.