வாஷிங்டன்: குழந்தையின் தோல் உரிந்து வரும் நிலைக்கு ஒரு தந்தை காரணமாகியுள்ள சம்பவம் அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் நடந்துள்ளது.
வெந்நீர் நிறைந்த தொட்டியில் தன் நான்கு மாதக் குழந்தையை 41 வயது மேத்யூ நீல்சன் பெக் வைத்ததை அடுத்து குழந்தையைத் துன்புறுத்தியது தொடர்பில் யூட்டா காவல் அதிகாரிகள் ஆடவரைக் கைது செய்தனர்.
குழந்தையின் உடலின் 40% கடுமையாகக் காயமடைந்திருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
குழந்தையைக் குளிப்பாட்டும்போது அது அழுதுகொண்டே இருந்ததாகவும் அது வழக்கமான ஒன்றாகத் தான் கருதியதாகவும் நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான பெக் கூறியிருந்தார்.
இருப்பினும் குழந்தையைக் குளிப்பாட்டத் தொடங்கி நான்கு, ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தண்ணீர் மிகவும் சூடாக இருப்பதை பெக் உணர்ந்ததாகக் கைது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குளிர்ந்த நீர், குளிர்ந்த துண்டு, ‘பெட்ரோலியம் ஜெல்லி’ போன்றவற்றைக் கொண்டு அந்தத் தந்தை குழந்தையின் தோல் சூட்டைத் தணிக்க முயன்றும் தோல் உரிந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், பெக் ஏற்கெனவே தண்டனை தருவதற்காக இவ்வாறு சூடான நீரையும் குளிர்ந்த நீரையும் பயன்படுத்தி உள்ளதாக பெக்கின் மனைவி காவல்துறையினரிடம் கூறியிருந்தார்.
கடும் குளிர்நீரில் முன்னதாகக் குழந்தையை இட்டதில் அதன் தோல் நீலநிறமாக மாறியது என்றும் குழந்தையை பெக் பலசாலி ஆக்க அவ்வாறு செய்தார் என்றும் கூறப்படுகிறது.

