நியூயார்க்: அமெரிக்காவில் ஆண்டுதோறும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களும் அவற்றில் அடங்கும். அதனால் அந்நாட்டில் விமான நிலையங்களிலும் விரைவுச்சாலைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்படும்.
எனினும், நன்றி கூறும் நாள் (தேங்ஸ்கிவிங்) வரும் காலகட்டத்தில் வீசவிருக்கும் புயலால் பலரின் பயண ஏற்பாடுகளுக்கு இடையூறு வரும் என்ற அச்சம் நிலவுகிறது. இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று, பனி போன்றவற்றால் பல இடங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகள் பல மோசமான குளிர் அல்லது மழையால் பாதிக்கப்படும் என்று வானிலை முன்னுரைப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் கடும் குளிர் ஏற்படலாம் அல்லது அதிக மழை பொழியலாம். எப்படிப் பார்த்தாலும் நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் நேரம் செலவிடுவதற்காகப் பயணம் மேற்கொள்வோர் பாதிப்புக்கு ஆளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமையிலிருந்து இவ்வாரம் செவ்வாய்க்கிழமைக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 30 மில்லியன் பேர் விமானப் பயணங்களை மேற்கொள்வர் என்று கணிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவானதைக் காட்டிலும் 11.5 விழுக்காடு அதிகம்.
நியூயார்க் வட்டாரத்தில் உள்ள நான்கு முக்கிய விமான நிலையங்களில் மட்டும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி வரை 3.1 மில்லியன் பயணிகள் வந்து செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வட்டாரம், மோசமான பருவநிலை ஏற்படக்கூடிய பாதையில் அமைந்துள்ளது.

