காஸாவில் நடப்புக்கு வந்த சண்டை நிறுத்தம்

காஸா: காஸாவில் இஸ்‌ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான தற்காலிக சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவ. 24) நடப்புக்கு வந்துள்ளது.

கடந்த 48 நாள்களாக காஸாவில் பேரழிவை ஏற்படுத்திய தாக்குதல்கள் முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இது தற்காலிக சண்டை நிறுத்தம் மட்டுமே என்று இரு தரப்பும் எச்சரித்துள்ளன.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு (சிங்கப்பூரில் பிற்பகல் ஒரு மணி) சண்டை நிறுத்தம் தொடங்கியது.

இருதரப்பும் ஆங்காங்கே உடன்பாடு மீறப்படுவதாக ஒன்றையொன்று குறைகூறினாலும், விமானங்கள் குண்டு வீசியதாகவோ கவச வாகனங்கள் தாக்குதல் மேற்கொண்டதாகவோ தகவல் இல்லை.

வெள்ளிக்கிழமை பின்னேரம் ஹமாஸ் தரப்பினர் தாங்கள் பிணைபிடித்தவர்களில் 13 இஸ்ரேலியப் பெண்களையும் குழந்தைகளையும் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்தனர். உதவிப் பொருள்களை காஸாவிற்குள் அனுமதிக்கவும் உறுதி தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடமுனையிலிருந்து இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் நகர்ந்து சென்றதைப் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனச் செய்தியாளர்கள் கூறினர்.

எகிப்திலிருந்து உதவிப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் தென்முனையில் நுழைந்ததைக் கண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

காஸாவின் வடபகுதியில் இஸ்ரேலிய ஆகாயப் படையோ பாலஸ்தீனத் தரப்போ தாக்குதல் மேற்கொண்டதற்கான சத்தம் கேட்கவில்லை என்று கூறப்பட்டது.

தெற்குப் பகுதியிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் கான் யுனிஸ் நகர வீதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது.

ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள், இஸ்‌ரேலியப் படையினர் என இருதரப்பினரும் சண்டை விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளனர்.

“மீண்டும் சண்டை தொடங்கியவுடன் கூடுதலான பிணையாளிகளை விடுவிக்க நெருக்குதல் தரப்படும்,” என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

காஸாவின் வடக்குப் பகுதி ஆபத்தான போர் வட்டாரம் என்று குறிப்பிட்ட இஸ்‌ரேலிய ராணுவம், பாலஸ்தீனர்கள் அங்கு திரும்பும் எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று ஆலோசனை கூறியது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்‌ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேரைக் கொன்றதுடன் ஏறக்குறைய 240 பேரைப் பிணை பிடித்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

அதற்குப் பதிலடியாக காஸா வட்டாரத்தில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. அதில் 14,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் சிறுவர்கள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறினர்.

பிணையாளிகளும் உதவிப் பொருள்களும்

நான்கு நாள் சண்டை நிறுத்தத்தின்போது கூடுதல் உதவிப் பொருள்கள் காஸா சென்றடையும். எகிப்து ஒவ்வொரு நாளும், 130,000 லிட்டர் டீசலையும் நான்கு லாரிகளில் எரிவாயுவையும் அனுப்ப உறுதிகூறியுள்ளது. இந்த நான்கு நாள்களிலும் அன்றாடம் 200 லாரிகளில் உதவிப் பொருள்கள் அனுப்பப்படும் என்று அது குறிப்பிட்டது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு (சிங்கப்பூரில் நள்ளிரவு), முதிய பெண்கள் உட்பட, பிணை பிடிக்கப்பட்ட சிலர் விடுவிக்கப்படுவர் என்றும் நான்கு நாள்களில் மொத்தம் 50 பேர் விடுவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

கத்தாரில் நடைபெற்ற அமைதிப் பேச்சில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

நவம்பர் 23ஆம் தேதி காஸா சென்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினர், எகிப்திய பேராளர் குழுவிடம் பிணையாளிகள் ஒப்படைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவர் என்று எகிப்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

அதற்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து பாலஸ்தீனர்கள் 39 பேர் விடுவிக்கப்படுவர். அவர்களில் 24 பேர் பெண்கள், 15 பேர் பதின்ம வயதினர் என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தத் தற்காலிக சண்டை நிறுத்தம், நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சண்டை நிறுத்தம் தொடங்கிய சில மணி நேரங்களில் எரிபொருள் ஏற்றிய 60 லாரிகள் எகிப்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அவற்றில் முதல் இரு லாரிகளில், ‘மனிதகுலத்திற்காக ஒன்றுபடுவோம்’, ‘காஸாவிலுள்ள சகோதரர்களுக்காக’ என்ற வாசகங்கள் இடம்பெறும் பதாகைகள் பொருத்தப்பட்டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!