திரங்கானு: மலேசியாவில் ஒரு குடும்பத்தினர் மதம்கொண்ட யானைகளின் சீற்றத்திலிருந்து தப்பியிருக்கின்றனர்.
இச்சம்பவம் நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மலேசியாவின் கிழக்கு-மேற்கு விரைவுச்சாலையில் டிட்டிவாங்கா பகுதியில் உள்ள ஓய்வெடுக்கும் இடத்துக்கு அருகே நிகழ்ந்தது.
யானைகள் சாலையைக் கடக்கும்போது தனது கார் யானைக் குட்டி ஒன்றின் மீது மோதியதாக 48 வயது மருத்துவ உதவியாளரான முகம்மது அஸியான் முகம்மது நூர் தெரிவித்தார். அவர் ஓட்டிய காருக்குள் அவருடைய மனைவியும் 23 வயதான மூத்த மகனும் இருந்தனர்.
யானைகள் கார் கதவுகளை மிதித்ததாகவும் தாங்கள் அனைவரும் உயிருக்குப் பயந்ததாகவும் அவர் கூறினார். ஒருவழியாக காரை அங்கிருந்து ஓட்டிச் சென்று தப்பியதாக திரு முகம்மது அஸியான் சொன்னார்.

