சுங்கை பட்டானி: வாடகை கார் ஓட்டுநரிடமிருந்து கொள்ளையடிக்க முயன்றதாக மலேசியாவின் கெடா மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மீது டிசம்பர் 3ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
பள்ளி மாணவனான அந்தச் சிறுவன் நவம்பர் 27ஆம் தேதியன்று 65 வயது ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
தனியார் வாடகை கார் கோரி சந்தேக நபர் ஒரு வாடகை கார் செயலியைப் பயன்படுத்தி உள்ளதாக அறியப்படுகிறது.
தொடக்கத்தில், சிறுவன் 50 ரிங்கிட் கடன் வேண்டும் என்றும் அந்தத் தொகை தனது வீட்டு வாடகைக்குத் தேவைப்படுகிறது என்றும் ஓட்டுநரிடம் சவாரியின்போது கேட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பின்னர், இறங்கும் சமயத்தில் சிறுவன் கத்தியால் குத்த முயன்றதாகவும் ஓட்டுநரின் சட்டைப் பைக்குள் கைவிடப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
சிறுவனின் கையை ஓட்டுநர் கடித்ததாகவும் அதன் பின்னர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு சிறுவன் பிடிபட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஓட்டுநரின் காரில் 25 செண்டிமீட்டர் நீளமுடைய கத்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.