பெய்ஜிங்: சீன அரசாங்கம், அண்மையில் அதிகரித்துள்ள சுவாச நோய்க்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகிறது.
இதற்கு முன் அறியப்பட்ட நோய்க்கிருமிகளால் சுவாச நோய் ஏற்படுவதாகவும் நோய் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி முயற்சிகள் இன்றியமையாதவை என்றும் டிசம்பர் 2ஆம் தேதி அந்நாட்டின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியது. இந்த நிலையில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் ‘மைக்கோபிளாஸ்மா’ நிமோனியா, ஃபுளு, சுவாச நோய்க்கிருமி சீனாவின் பல பகுதிகளில் பரவி வருகிறது.
“ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க்கிருமிகளால் ஒரே பகுதியில் ஒட்டுமொத்தமாக பலர் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ ஊழியர்கள் தகுந்த சிகிச்சை திட்டங்களுடன் இதனை சமாளித்து வருகின்றனர்,” என்று தேசிய சுகாதார ஆணையத்தின் பேச்சாளர் மி ஃபெங் கூறினார்.
“முன்பின் அறியப்படாத நோய்க்கிருமி மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் சுவாச நோய் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
“முதியோர், குழந்தைகள் உட்பட எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு தடுப்பூசி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்தை குறைக்க முடியும்,” என்றார் திரு மி.
மருத்துவமனை படுக்கைகள் விநியோகத்தை அதிகரிப்பது, வெளிநோயாளி சிகிச்சை செயல்முறையை சீரமைப்பது, இணைய மருத்துவ சேவைகளை வழங்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய அவர், மருத்துவமனைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முகக்கவசம் அணிவது மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற தனிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இதில் பேசிய சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தின் ஃபுளு நிபுணரான திருவாட்டி வாங் டயான், நாட்டில் தற்போது பரவி வரும் அனைத்து நோய்த்தொற்றுகளுக்கும் தொடர்புள்ள தடுப்பூசிகள் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் மருத்துவ அமைப்புகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டினார்.
ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஃபுளு காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அவர் ஊக்கப்படுத்தினார்.
இதனால் நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் நோய் அறிகுறிகளைக் குறைக்கவும் தடுப்பூசி உதவும் என்று அவர் கூறினார்.