ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வட சுமத்ராவிலுள்ள தோபா ஏரி அருகே திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டார். மேலும், 11 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டின் பேரிடர் நிர்வாக அமைப்பு ‘பிஎன்பிபி’ தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஏரிக்கரைகளில் அமைந்திருந்த பகுதிகளைப் பாதித்தது.
வீடுகள், தேவாலயம், பள்ளி, ஹோட்டல் உள்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிஎன்பிபி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
உலகின் ஆகப் பெரிய எரிமலை ஏரி எனக் கருதப்படும் தோபா ஏரி, இந்தோனீசியர்களுக்கும் அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கும் இடையே நன்கு பிரபலமான ஒரு சுற்றுலாத்தலம்.
திடீர் வெள்ளத்தால் பெரும் பாறைகள், மரங்கள், சகதி ஆகியவை மலைகளின் வழியாக வந்து வீடுகளை அவற்றின் கூரைப்பகுதிவரை புதைத்துவிட்டதைக் காட்டும் படங்களை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஏறத்தாழ 350 பேர் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமார் 200 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.