பெய்ஜிங்: சீனாவில் சுவாச நோய்க் கிருமிப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மருத்துவமனைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வார நாள்களில் மருத்துவமனைகள் கூடங்களை அமைப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.
வூஹான் நகரின் சிறார் மருத்துவமனை கூடுதல் நேரம் இயங்குகிறது. அங்கு காலையில் திறக்கப்படும் மருந்தகம் ஒன்று இப்போது காலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படுகிறது.
மேலும், அந்த மருத்துவமனையில் பிற்பகல், இரவு வேளைகளில் இயங்கும் மருந்தகங்களும் தொடங்கப்பட்டுள்ளன. கூடுதல் எண்ணிக்கையில் வரும் நோயாளிகளைக் கவனிப்பது அந்நடவடிக்கையின் நோக்கம் என்று மருத்துவமனை குறிப்பிட்டது.
இந்நடவடிக்கைகளின் மூலம் சீராகியிருக்கும் சுகாதாரப் பராமரிப்பு முறையால் பெற்றோரும் பலனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று வூஹான் சிறார் மருத்துவமனையின் தகவல் கூடத்தில் (இன்ஃபர்மேஷன் டெஸ்க்) பெற்றோர் பலர் தாங்களாகவே மருத்துவச் சேவைகளை நாடுவதற்கான தகவல்களைப் பதிவிட்டனர். தாதியரின் உதவியோடு அவர்கள் அவ்வாறு செய்தனர்.
அதன் மூலம் நேரத்தை அதிகம் மிச்சம் செய்ய முடிவதாக நோயாளிகள் சிலர் கூறினர்.
நிங்ஸியா ஹுய் வட்டாரத்தில் உள்ள யின்சுவான் மகப்பேறு, சிறார் மருத்துவமனையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவி நாடிவந்த சிறாரின் எண்ணிக்கை, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஐந்து மடங்கானது.
நிலைமையைக் கையாள அந்த மருத்துவமனை மாலை ஆறு மணி முதல் இரவு 10 வரை இயங்கும் மருந்தகத்தைத் தொடங்கியது. அது, நிங்ஸியா ஹுய் வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ள அத்தகைய முதல் மருந்தகம்.
டியான்ஜின் நகரின் சிறார் மருத்துவமனையில் ‘முதலில் பரிசோதனை, பின்னர் சிகிச்சை’ (டெஸ்ட் ஃபர்ட்ஸ்ட், தென் ட்ரீட்) எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இம்முறைக்குத் தகுதிபெறும் நோயாளிகள் முதலில் பரிசோதனைகளை மேற்கொள்வர், அதற்குப் பிறகு சிகிச்சை பெறக் காத்திருப்பர்.
இதன் மூலம் அம்மருத்துவமனையில் திரண்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றோடு. சீனாவில் தற்போதைக்கான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதோடு சுவாச நோய்க்கு ஆளாகமல் தவிர்ப்பதற்கான முயற்சிகள், குளிர்காலத்தில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.