சீனா: சீனாவில் உள்ள மருத்துவர்கள் அண்மையில், ஒரு பெண்ணின் கண்களிலிருந்து உயிருள்ள 60 புழுக்களை அகற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணைப் பற்றிய மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கண்களில் அரிப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்து கண்களைக் கசக்கியபோது உயிருள்ள புழு ஒன்று வந்து விழுந்ததைக் கண்டு பீதியுற்ற அப்பெண், குன்மிங் நகர மருத்துவமனைக்கு விரைந்ததாகவும் கூறப்பட்டது.
அவரது கண்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கண் இமைக்கும் விழிப்படலத்திற்கும் இடையிலுள்ள பகுதியில் புழுக்கள் நிரம்பியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பெண்ணின் வலது கண்ணிலிருந்து 40க்கு மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணிலிருந்து 10க்கு மேற்பட்ட புழுக்களையும் மருத்துவர்கள் அகற்றியதாக ‘மிரர்’ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
ஈக்களின் மூலம் பரவும் ஒட்டுண்ணிகளால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கருதுவதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், நாய்கள், பூனைகளிடமிருந்து தனக்கு அது பரவியிருக்கக்கூடும் என்று அப்பெண் கருதுகிறார். அவ்விலங்குகளைத் தொட்ட பின்னர் கண்களைக் கசக்கியபோது அவை பரவியிருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.
கண்களில் ஒருவேளை புழுக்கள் எஞ்சியிருந்தால் சிகிச்சை அளிக்க ஏதுவாக, அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும்படி மருத்துவர்கள் அவரை வலியுறுத்தியுள்ளனர். செல்லப்பிராணிகளைத் தொட்ட பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.