டெல் அவிவ்: காஸா பகுதியில் நிரந்தரமாக இருக்கும் எண்ணம் இஸ்ரேலுக்குக் கிடையாது என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் யோஆவ் கலான்ட் தெரிவித்துள்ளார்.
அப்பகுதி எந்தத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை முடிவுசெய்வதன் தொடர்பில் கலந்துபேச இஸ்ரேல் தயாராய் இருப்பதாகவும் திரு கலான்ட் குறிப்பிட்டார். காஸாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழு இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பாக மட்டும் இருக்கக்கூடாது என்று அவர் சுட்டினார்.
ஈரானிய ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புடன் ஓர் உடன்பாட்டுக்கு வர இஸ்ரேல் தயாராய் இருப்பதாகவும் திரு கலான்ட் சொன்னார். அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தம் இடம்பெற்றால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பான வட்டாரத்தை அமைப்பது போன்ற சில நிபந்தனைகள் இடம்பெறும் என்றும் திரு கலான்ட் தெரிவித்தார்.
“ஹமாஸ் அமைப்பை அழிக்க இஸ்ரேல் எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்கும். அதேவேளை, காஸாவில் நிரந்தரமாகத் தங்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் தெற்கு இஸ்ரேலில் எதிர்பாரா விதமாகத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பிறகு ஹமாஸ்மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல் நிலம்வழித் தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டது.
இப்படி இருக்கையில் ஆக மோசமான நிலை உருவாகும் என அஞ்சப்பட்ட வட காஸாவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக திரு கலான்ட் குறிப்பிட்டார். போர் முடிந்த பிறகு காஸா யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் தயாராய் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“அந்தத் தரப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றாக இருக்கக்கூடாது என்பது முக்கிய நிபந்தனை. என்னைப் பொறுத்தவரை இதர அம்சங்கள் குறித்து கலந்துபேசி முடிவெடுக்கலாம். நிச்சயமாக அந்த அமைப்பு ஹமாசாக இருக்காது, இஸ்ரேலாகவும் இருக்காது. மிரட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ராணுவ ரீதியாக இயங்குவதற்குமான சுதந்திரம் எங்களுக்கு உண்டு,” என்று அவர் விளக்கினார்.