காத்மாண்டு: வயது என்பது வெறும் எண்ணிக்கை தான்.
இதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருந்தாலும் அதற்கு முன்மாதிரியாகத் திகழ்வோர் மிகச் சிலரே.
நேப்பாளத்தைச் சேர்ந்த 61 வயது மாது ஒருவர் தமது செயல்களால் பலர் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
பேரன், பேத்தி இருவருடனும் பள்ளிக்குச் செல்லும் இவர், முதலாம் வகுப்பில் தாம் படிப்பதற்காகவும் பதிந்துகொண்டார்.
நேப்பாளத்தின் பைத்தடி மாவட்டத்தில் பட்டான் நகராட்சியில் வாழ்பவர் சந்திரா தேவி.
எழுத்துகளைக் கற்றுக்கொண்ட சந்திரா தேவி, தற்போது தம் பெயரை எழுத அறிந்திருப்பதாகப் அவர் பயிலும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும், கவிதை வாசிப்பு, வகுப்பு நண்பர்களுடன் பள்ளி நடவடிக்கைகளில் ஈடுபாடு என சந்திரா தேவி அனைத்திலும் அசத்துகிறார்.
பள்ளியும் இந்தப் பாட்டிக்கு ஆதரவு அளித்து வருவதுடன் பாடநூல்கள், எழுதுகோல்கள், பைகள் ஆகியவற்றுக்காக ஏற்பாடு செய்து தந்துள்ளது.
பாட்டியின் முயற்சி குறித்து பள்ளி முதல்வரான ராம் குன்வாராங் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
கல்வி மீது சந்திரா தேவி அதீத ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், அனைவருக்கும் அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.