பட்டாயாவில் சட்டவிரோதமாக விற்கப்படும் சிரிப்பூட்டும் வாயு

1 mins read
5bc0537e-2d35-4ad7-9927-c5bf2687966d
கடைக்கு வெளியே 10 பலூன்கள் வாங்கினால் இரண்டு பலூன்களும் ஒரு குவளை பீரும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு இருந்ததாக  ‘தி நே‌ஷன்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது. - படம்: ‘தி நே‌ஷன்’ செய்தி நிறுவனம்

பேங்காக்: சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் சட்டவிரோதமாக சிரிப்பூட்டும் வாயு (நைட்ரஸ் ஆக்சைட்) விற்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்க அனுமதியுடன் கஞ்சா விற்கப்படும் ஒரு கடையில் சட்டவிரோதமாக சிரிப்பூட்டும் வாயுவை பலூன்களில் அடைத்து விற்பனை செய்வதாக ‘தி நே‌ஷன்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாக சந்தேகிக்கப்படும் அக்கடையில் சோதனைகளும் நடத்தப்பட்டன. அதில் உள்ளூர்வாசிகள், வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் சிரிப்பூட்டும் வாயு விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது என்று ‘தி நே‌ஷன்’ குறிப்பிட்டது.

கடைக்கு வெளியே 10 பலூன்கள் வாங்கினால் இரண்டு பலூன்களும் ஒரு குவளை பீரும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு இருந்ததாகவும் அது தெரிவித்தது.

தாய்லாந்தின் மருந்துச் சட்டப்படி நைட்ரஸ் ஆக்சைட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது . அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் 377 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்