தோக்கியோ: ஜப்பானில் குமாமோடோ நகரில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதற்கு காரணம் ஒரு கரப்பான் பூச்சி.
டிசம்பர் 10ஆம் தேதி வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக மெனிச்சி ஷிம்புன் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
வெடிப்பில் மாடத்தில் இருந்த சன்னல் கண்ணாடி உடைந்ததில் வீட்டின் உரிமையாளருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அது கூறியது.
ஒரு கரப்பான் பூச்சியைக் கொல்வதற்காக அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்தை வீட்டின் உரிமையாளர் தெளித்தபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது போன்ற வெடிப்புகள் ஏற்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாக ஜப்பானின் தேசிய பயனீட்டாளர் விவகார நிலையம் கூறியது.
மின்சாரச் சாதனங்களுக்கு அருகே பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது தீ மூள்வதாக அது நம்புகிறது.
மின்சாரச் சாதனங்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிப்பது ஆபத்தானது. சாதனங்களை சேதப்படுத்துவதோடு அதனால் மனிதர்களுக்கும் காயம் ஏற்படும் என்று பல ஜப்பானிய பூச்சி ஒழிப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.