ஹாங்காங்: குழந்தைகள்தான் சீனாவிற்கான சிறந்த முதலீடு என்று பெய்ஜிங்கின் யூவா மக்கள்தொகை ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் நுகர்வுகள் அதிகரிக்கவும் உள்நாட்டில் தேவைகளை வளர்க்கவும் மனித வளம் முக்கியம் என்றும் அது கூறியது.
2022ஆம் ஆண்டு சீனாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் ஆகப்பெரிய இரண்டாவது பொருளாதார நாடாக விளங்கும் சீனா, கொவிட்-19 கொள்ளை நோய்க்குப் பிறகு பொருளாதாரத்தில் போதிய முன்னேற்றம் பெற முடியவில்லை. மேலும் அதன் ஊழியரணியில் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
“தற்போதைய பொருளாதாரச் சூழலில் சீனாவிற்கு சிறந்த முதலீடு என்பது குழந்தைகள்தான். உள்கட்டமைப்புக்கான முதலீடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது, உற்பத்தி அளவு விற்பனை அளவைவிட அதிகமாக இருக்கிறது, ஆனால் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது,” என்று யூவா மக்கள்தொகை ஆய்வுக் கழகம் குறிப்பிட்டது.
குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.
சீனாவில் இளையர்களின் எண்ணிக்கை குறைந்தால் பொருளாதார அடிப்படையில் பின்னடைவு ஏற்படக்கூடும் என்றும் கழகம் தெரிவித்தது.
மகப்பேற்றுச் சலுகைகள், குழந்தை வளர்ப்புச் சலுகைகள் போன்றவற்றை தேசிய அளவில் விநியோகிக்க வேண்டுமென அது கேட்டுக்கொண்டது.