டெல் அவிவ்: காஸாவில் ஹமாஸ் அமைப்பினர் பிணை பிடித்து வைத்திருந்த மூவரைத் தாங்கள் தவறுதலாகக் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
அச்சம்பவம் காஸாவின் ஷெஜாயா பகுதியில் நிகழ்ந்தது. அப்பகுதி ஹமாஸ் அமைப்பினர் வலுவாக இருக்கும் இடம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த மூவரால் அபாயம் உள்ளதாகத் தவறாகக் கணிக்கப்பட்டிருந்தது; அதனால் இஸ்ரேலிய துருப்புகள் அந்த மூவரை நோக்கிச் சுட்டதால் அவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதி சோதனையிடப்பட்டபோது மாண்டோரின் அடையாளம் குறித்து சந்தேகம் எழுந்ததாகவும் அவர்களின் உடல்கள் இஸ்ரேலிய வட்டாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. சோதனையில் அந்த மூவரும் ஹமாஸ் அமைப்பினரால் பிணை பிடித்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிய வந்ததாக அறிக்கை கூறியது.
மாண்ட பிணைக் கைதிகள் திரு யோட்டம் ஹாய்ம், திரு அலொன் ஷம்ரிஸ், திரு சமெர் டலால்கா என்று அடையாளம் காணப்பட்டனர்.
சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.