‘புதிய மிரட்டல்களை எதிர்கொள்ள ஐரோப்பா தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்’

2 mins read
d435b1ae-d21f-42d6-9bdd-49fbc850ab9d
ஜெர்மன் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ். - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: அடுத்த சில ஆண்டுகளில் புதிய ராணுவ மிரட்டல்கள் ஏற்படக்கூடும் என்பதால் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஐரோப்பா விரைந்து செயல்படவேண்டும் என்று ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்த ஆயுதத் தயாரிப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாகவும் அதே சமயத்தில் ஜார்ஜியா, மோடோவா போன்ற நாடுகளை அது மிரட்டி வருவதாகவும் திரு பிஸ்டோரியஸ் கூறினார்.

அமெரிக்காவின் கவனம் இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்குத் திரும்பி இருப்பதாகவும் ஐரோப்பாவில் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐரோப்பியர்களான நாமே கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆயுதப் படைகள், தொழில்துறை, சமுதாயம் ஆகியவற்றில் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வர ஐந்திலிருந்து எட்டு ஆண்டுகள் எடுக்கும்,” என்று திரு பிஸ்டோரியஸ் தெரிவித்தார்.

இருப்பினும், ஆயுதத் தயாரிப்பை அதிகரிக்க ஐரோப்பாவுக்குக் கூடுதல் காலம் எடுக்கும் என்றார் அவர்.

உக்ரேனுக்கு உதவ வழங்கப்படும் நிதி குறித்து அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படாவிடில் அந்த நிதியை ஐரோப்பா வழங்க வேண்டிவரும் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு கொண்டாடும் அரசாங்கம் போலந்தில் பதவிக்கு வந்துள்ளது. எனவே, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து இடையிலான ராணுவ ஒத்துழைப்பு மேம்படக்கூடும் என்று திரு பிஸ்டோரியஸ் கூறினார்.

போலந்துக்குக் கூடிய விரைவில் பயணம் மேற்கொள்ளப்போவதாக அவர் கூறினார்,

“நேட்டோவின் தற்காப்புத் திட்டங்களை மையமாகக் கொண்டு கிழக்கு எல்லைப் பகுதியில் ராணுவத்தை நிறுத்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்,” என்று திரு பிஸ்டோரியஸ் கூறினார்.

இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானிலும் மாலியிலும் பெரிய அளவிலான ராணுவ வீரர்களை ஜெர்மனி அனுப்பி வைத்திருந்தது.

ஆனால் தற்போது அவ்வாறு செய்ய எவ்விதத் திட்டமும் இல்லை என்றார் திரு பிஸ்டோரியஸ்.

குறிப்புச் சொற்கள்