சிசினாவ்: உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதை அடுத்து அண்டை நாடான மொல்டோவாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மொல்டோவா பிரதமர் டோரின் ரெசீன் அக்கறை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா விடுக்கும் மிரட்டல்களை எதிர்கொள்ள மோல்டாவாவின் போர் விமான எதிர்ப்பு ஆயுதங்களை மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மேற்கத்திய நாடுகளுடன் நட்புறவு கொண்டிருக்கும் மொல்டோவாவின் இறையாண்மைக்கு ரஷ்யாதான் ஆகப் பெரிய மிரட்டலாக இருப்பதாக மொல்டோவா நாடாளுமன்றம் அண்மையில் அடையாளம் கண்டது.
அதனைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்பு உத்திமுறையைக் கடைப்பிடிக்க நாடாளுமன்றம் ஒப்பதல் வழங்கியது.
இதற்கிடையே, உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்கு மொல்டோவா அதிபர் மயா சந்து கண்டனம் தெரிவித்தார்.
தமது ஆட்சியைக் கவிழ்க்க ரஷ்யா திட்டமிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மொல்டோவாவையும் உக்ரேனையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்க கடந்த வாரம் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், மொல்டோவா நடுநிலைமையுடன் இருக்கும் என்று அதன் அரமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ரெசீன் நடுநிலைமை மொல்டோவாவைப் பாதுகாக்காது என்று கூறினார்.
மொல்டோவா மக்கள் மற்றும் வர்த்தகங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றார் அவர்.