வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட ஸி, பைடன்

வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட ஸி, பைடன்

2 mins read
93995f02-b30b-49c6-91d3-e6f1b43fe370
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஏபெக் மாநாட்டின்போது சந்தித்த ஸி, பைடன். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 45 ஆண்டு நிறைவு அனுசரிக்கப்படும் வேளையில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பாராட்டுகளைப் பரிமாறிக்கொண்டதாக சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் திங்கட்கிழமையன்று குறிப்பிட்டது

மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், திரு ஸி இருவரும் தங்களுக்கிடையே புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். 2024, அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நட்பைச் சித்திரிக்கும் ஆண்டாக இருக்கும் என்று இருவரும் கூறியதாகவும் சின்ஹுவா தெரிவித்தது.

புத்தாண்டுக்கு முதல் நாளன்று திரு ஸி, ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இருவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சீனாவுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையே அரசதந்திர உறவு தொடங்கி 75 ஆண்டு நிறைவு இவ்வாண்டு நிறைவடையும்.

அண்டை நாடுகளான சீனாவுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையிலான நிரந்தர நட்பை சித்திரிக்கும் வகையில் இரண்டும் ஒன்றுபட்டு தொடர்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று திரு ஸி சொன்னார். அதோடு, தங்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளும் பலனடையும் வண்ணம் ஒத்துழைக்கவேண்டும், முழுமையான உத்திபூர்வ செயல்பாட்டில் ஈடுபடவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மா சே துங் சீனாவை (பீப்பள்ஸ் ரிபப்ளிக் ஆஃப் சைனா) உருவாக்கி 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உள்நாட்டுப் போரில் சியாங் கய் ‌ஷியோக் தலைமையிலான (ரிபப்ளிக் ஆஃப் சைனா) படைகளைத் தோற்கடித்து திரு மா சே துங் வெற்றிபெற்றார்.

1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியன்று சீனா பிறந்ததென்று திரு மா சே துங் அறிவித்தார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரு சியாங்கின் அரசாங்கம் தைவானுக்குத் தப்பியோடியது.

அந்த உள்நாட்டுப் போரை முடித்து வைப்பதற்கான அமைதி ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப்படவில்லை. தைவானின் அதிகாரபூர்வ பெயர் இன்னமும் ‘ரிபப்ளிக் ஆஃப் சைனா’ என இருந்து வருகிறது.

சீனாவும் தைவானும் ஒன்றிணைவது நிச்சயமாக நடக்கப்போகும் ஒன்று என திரு ஸி, தமது புத்தாண்டு உரையில் எடுத்துரைத்தார். ஓராண்டுக்கு முன்பு சொன்னதைக் காட்டிலும் திரு ஸி இம்முறை கூடுதல் வீரியத்துடன் அவ்வாறு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுமார் இரண்டு வாரங்களில் தைவானியப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திரு ஸி பேசினார்.

குறிப்புச் சொற்கள்