காஸா: காஸாவிலிருந்து சில இஸ்ரேலியத் துருப்புகள் மீட்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்த சில இஸ்ரேலியப் படைகள் படைகள் மீட்கப்படுவதாக அவர் கூறினார்.
நள்ளிரவில் புத்தாண்டு தொடங்கியதும் ஹமாஸ் படை தொடர்ச்சியாக உந்துகணைகளை ஏவி இஸ்ரேலில் தாக்குதல் தொடுத்தது.
அதேநேரம் பாலஸ்தீன வட்டாரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இருபதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2024ஆம் ஆண்டு தொடங்கியதும் வான்வெளி எச்சரிக்கை ஒலி இஸ்ரேல் முழுவதும் ஒலித்தது. ஏவுகணைத் தடுப்பு சாதனங்கள் ராக்கெட்டுகளை இடைமறிக்கும் சம்பவத்தை டெல் அவிவ் நகரில் இருந்து பார்க்க நேர்ந்ததாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்தார்.
அதேநேரம் இஸ்ரேலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் ஒளிந்துகொள்ள இடம்தேடியதையும் செய்தியாளர் கண்டார்.
அவர்களில் ஒருவரான கேப்ரியல் ஸெமெல்மன், 26, என்பவர், “பயந்துபோய் மூலையில் ஒளிந்திருக்கிறோம். என் இதயம் படபடவெனத் துடிக்கிறது.
“பார்க்கவே பயங்கரமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில்தான் நாங்கள் வாழ்கிறோம்,” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
சூப்பர்நோவா இசைவிழாவில் இருந்த ரான் ஸ்டேல், 24, என்பவர், ஹமாஸ் தாக்குதலில் தம் நண்பர்களில் ஒருவர் கொல்லப்பட்டதால் தமது மனம் கொண்டாட்டத்திற்கு இடம் தரவில்லை என்றார்.
இதற்கிடையே, புத்தாண்டுத் தாக்குதலுக்கு ஹமாஸ் படையின் ஆயுதப் பிரிவான ‘எஸ்ஸடைன் அல்-காசம் பிரிகேட்ஸ்’ பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த ஆயுதப் பிரிவு, காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவேற்றி உள்ளது.
“அப்பாவி மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேலுக்குப் பதிலடி தரும் விதமாக எம்90 ரக ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினோம்,” என்று அந்தக் காணொளியில் அது கூறியது.
தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்தது. இருப்பினும், உயிர்ச்சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து அது எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் வழிநடத்தும் சுகாதார அமைச்சு கூறியது. காஸாவின் பிற பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகின.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது முதல் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இடைவிடாத போர் நீடித்து வருகிறது.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்த அதிகாரத்துவ கணக்கின்படி, இந்தப் போரில் 1,140 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிப் பொதுமக்கள்.
ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 21,822 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு கூறியது.
தாக்குதல் தொடங்கிய நாளில் ஹமாஸ் படையினர் பிணைபிடித்த 250 பேரில் பலரும் இன்னும் காஸாவில் உள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
ஹமாஸ் படையைத் துடைத்தொழிக்க உறுதி எடுத்து இஸ்ரேல் போரிட்டு வருகிறது.