லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் நீண்டகால தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
பிரிட்டனின் தேசிய சுகாதாரச் சேவை வரலாற்றில் இதுவரை கண்டிராத வேலைநிறுத்தமாக அது கருதப்படுகிறது.
மருத்துவ ஆலோசகர் நிலைக்குக் கீழ் உள்ள இளநிலை மருத்துவர்கள் ஆறு நாள் வெளிநடப்பைத் தொடங்கி உள்ளனர்.
நீண்டகாலமாகத் தொடரும் பிரிட்டிஷ் அரசாங்கத்துடனான சம்பள விவகாரத்தின் முத்தாய்ப்பாக அந்த வேலைநிறுத்தம் அமைந்துள்ளது.
மருத்துவர்களைப் பிரதிநிதிக்கும் பிரிட்டிஷ் மருத்துவச் சங்கம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மருத்துவர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்க அது வலியுறுத்தி உள்ளது.
“மருத்துவத் தொழில் மீதான நம்பிக்கைக் குறைந்து வருகிறது. இந்தத் தொழிலுக்கு வந்துள்ள பலரும் இதிலேயே நீடிக்க முடியுமா என்ற சந்தேகம் கொண்டுள்ளனர்.
“எனவே, இந்த நாட்டில் அவர்களுக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை அரசாங்கம் உணர்த்த வேண்டும்,” என்றும் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
குளிர்காலப் பருவத்தில் நிகழக்கூடிய சுவாசப் பிரச்சினையால் மருத்துவச் சேவை அதிக அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கும் வேளையில் வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே, கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் மருத்துவர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தம் செய்திருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இளம் மருத்துவர்கள் இப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மருத்துவ ஊழியரணியில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பராமரிப்புச் சேவையில் கணிசமான தாக்கம் இருக்கும் என்று தேசிய சுகாதாரச் சேவை நிலையம் தெரிவித்து உள்ளது.
இதுவரை கண்டிராத, மிகவும் கடினமான ஆண்டின் தொடக்கமாக ஜனவரி அமைந்துள்ளதாக நிலையத்தின் தேசிய மருத்துவ இயக்குநர் டாக்டர் ஸ்டீஃபன் போவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைநிறுத்தத்தை ஜனவரி 9ஆம் தேதி உள்ளூர் நேரம் காலை 7 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் மாலை 3 மணி) முடித்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
2023ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட 8.8 விழுக்காட்டு சராசரி சம்பள உயர்வுடன் மேலும் 3 விழுக்காட்டைச் சேர்த்து வழங்க இளம் மருத்துவர்கள் கேட்டு வருவதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கூறியுள்ளது.