தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, பிரிட்டன்

2 mins read
bc2a42fc-5ee0-45a7-95e9-3164f868705c
ஜனவரி 10ஆம் தேதி, பிரிட்டனின் ‘எச்எம்எஸ் டைமண்ட்’ போர்க் கப்பல் செங்கடலில் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவும் பிரிட்டனும் ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க அதிகாரிகள் ஜனவரி 11ஆம் தேதி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், சென்ற ஆண்டு இறுதிவாக்கில் செங்கடலில் பயணம் செய்த அனைத்துலகக் கப்பல்களைத் தாக்கியதற்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்காவும் பிரிட்டனும் பதிலடி தரத் தொடங்கியுள்ளன.

தலைநகர் சனா உட்பட ஏமன் முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை ‘அமெரிக்க-யூத-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு’ என்று அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் தொடங்கிய இஸ்‌ரேல்-ஹமாஸ் போர், மத்திய கிழக்கு வட்டாரத்தில் மேலும் பரவுவதை அண்மைய தாக்குதல் காட்டுவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் ஆஸ்திரேலியா, பஹ்ரேன், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் ஆதரவோடு ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜனவரி 11ஆம் தேதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

“செங்கடலில் அனைத்துலகக் கப்பல்களை ஹூதி தரப்பினர் தாக்கியதற்குப் பதிலடி இது. வரலாற்றில் முதல்முறையாக அவர்கள் கப்பல்கள் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சித் தாக்கியது குறிப்பிடத்தக்கது,” என்றார் அவர்.

“அந்தத் தாக்குதல்கள், அமெரிக்க அதிகாரிகளுக்கும் கடலோடிகள், பங்காளித்துவத் தரப்பினருக்கும் ஆபத்து விளைவித்ததுடன் வர்த்தகம், கடலில் பயணம் செய்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றையும் ஆபத்துக்குள்ளாக்கின,” என்று திரு பைடன் குறிப்பிட்டார்.

மக்களையும் தடையற்ற வர்த்தகத்தையும் காக்கும் பொருட்டு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றார் அமெரிக்க அதிபர்.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், இந்தத் தாக்குதல்கள், அவசியமானவை என்றும் சரியான பதிலடி என்றும் கூறினார்.

“அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் தாக்குதல்களைத் தொடர்ந்தனர்,” என்றார் அவர்.

“ஹூதி கிளர்ச்சியாளர்களை வலுவிழக்கச் செய்து அனைத்துலகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது,” என்றார் அவர்.

இந்த பதிலடி குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்த நிலையில், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு இதுகுறித்து இன்னும் கருத்துரைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்