மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ரயில் பயண அனுபவத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்பில், ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து ஐந்து திட்ட அறிக்கைகளைப் பெற்றுள்ளதாக மெக்சிகோ போக்குவரத்து அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) தெரிவித்தது.
மெக்சிகோவின் ரயில்வே கட்டமைப்பு, நாட்டின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது; அமெரிக்காவையும் இணைக்கிறது.
ஆயினும், அது பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணிகளுக்கான ரயில் போக்குவரத்தையும் மெக்சிகோ விரிவுபடுத்த விரும்புகிறது.
ஒருவேளை நிறுவனங்கள் பயணிகளுக்குச் சேவைகளை வழங்க மறுத்தாலும்கூட, அரசாங்கம் அச்சேவைகளை வழங்கும் என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் சென்ற ஆண்டு நவம்பரில் கூறினார். இவ்வாண்டுடன் அவரது பதவிக்காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
வடக்கு எல்லை நகரங்கள், வளைகுடா மற்றும் பசிபிக் கடற்கரைகள், மத்திய மெக்சிகோவின் முக்கிய நகரங்கள், தலைநகரின் இரண்டாம் நிலை பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஏழு வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவையை மேம்படுத்த அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவிருக்கிறது.