பருவநிலை மாற்றம்: 2050ஆம் ஆண்டுக்குள் 14.5 மில்லியன் மக்கள் மரணமடையலாம்

உலக பொருளியல் மாநாட்டின் அறிக்கை

பருவநிலை மாற்றம்: 2050ஆம் ஆண்டுக்குள் 14.5 மில்லியன் மக்கள் மரணமடையலாம்

2 mins read
876b84f3-11a2-4ef3-baea-1072fd0cd7fd
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மட்டும் 8.5 மில்லியன் மக்களின் மரணத்துக்கு காரணமாகலாம் என்று உலகப் பொருளியல் மாநாட்டு அறிக்கை கூறுகிறது. - படம்: இபிஏ

டாவோஸ்: பருவநிலை மாற்றம் உலகில் 2050ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 14.5 மில்லியன் உயிரிழப்புகளுக்கு காரணமாகலாம் என்று ஜனவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்ட உலகப் பொருளியல் மாநாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

அத்துடன், அமெரிக்க டாலர் 12.5 டிரில்லியன் (S$16.7 டிரில்லியன்) அளவுக்கு பொருளியல் இழப்புகளையும் அது ஏற்படுத்தலாம் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்த அறிக்கையை உலகப் பொருளியல் மாநாடும் ஒலிவர் வைமேன் என்ற ஆலோசனை நிறுவனமும் இணைந்து தயாரித்தன. அது உலக தொழில் புரட்சிக்கு முந்திய காலத்திற்குப் பின் பூமி வெப்ப நிலை 2.5 டிகிரி செல்சியசுக்கும் 2.9 டிகிரி செல்சியசுக்கும் அதிகரிக்கக்கூடும் என பருவநிலை தொடர்பாக பல அரசாங்கங்களைக் கொண்ட குழு அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக உலகப் பொருளியல் மாநாட்டின் செய்தி அறிக்கை விளக்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கை பருவநிலை பாதிப்பால் ஏற்படக்கூடிய ஆறு பெரிய விளைவுகளைப் பட்டியலிட்டது. அவை, வெள்ளம், வறட்சி, வெப்ப அலைகள், புயல், கட்டுக்கடங்கா தீ ஆகியவற்றுடன் உயர்ந்துவரும் கடல் மட்டம் என்று அறிக்கை விவரித்துள்ளது.

இதில் வெள்ளத்தால் மட்டுமே 2050ஆம் ஆண்டுக்குள் 8.5 மில்லியன் மக்கள் மரணமடைவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய மிகக் கடுமையான மரண விகிதம் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, வறட்சி காரணமாக 3.2 மில்லியன் மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது.

மறுபுறம் வெப்ப அலைகளால் 2050ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க டாலர் 7.1 டிரில்லியன் அளவிலான பொருளியல் இழப்பு ஏற்படக்கூடும் என்று அது கணித்துள்ளது.

பருவநிலை ஏற்படுத்தும் நெருக்கடியால் உலக மக்களிடையே சுகாதாரத்தில் ஏற்றத்தாழ்வு நிலை அதிகரிக்கும் என்றும் இதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் அதிக சிரமப்படுவர் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

ஆப்பிரிக்க, தென்னிந்திய வட்டாரங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக விளங்குவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் குறைந்த அளவிலான வளங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுடன் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் என்று அது பட்டியலிட்டது.

இதில் உலகப் பருவநிலை பங்குதாரர்கள் அனைவரும் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கரிமவாயு வெளியேற்றத்தைக் குறைத்து பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறையான சுகாதார பாதிப்புகளைக் குறைக்கும்படி அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்