பேங்காக்: மத்திய தாய்லாந்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஜனவரி 17ஆம் தேதியன்று வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் குறைந்தது 23 பேர் உடல் கருகி மாண்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு வடக்குப் பகுதியில், கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சுஃபான் புரி மாநிலத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் நிகழ்ந்தது.
இதுவரை ஆலையிலிருந்து யாரையும் உயிருடன் மீட்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
உயிர் பிழைத்தோரைத் தேடும் பணி தொடர்கிறது.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தாய்லாந்து காவல்துறை தீவிர விசாரணை நடத்துகிறது.