பெய்ஜிங்: மத்திய சீனாவில் உள்ள பள்ளி ஒன்றின் தங்கு விடுதியில் ஏற்பட்ட தீயினால் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்தார்.
சம்பவம் குறித்து சீன அரசு ஊடகம் ஜனவரி 20ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
இறந்தவர்கள் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கிட்டத்தட்ட ஒன்பது வயதுடையவர்கள் என்று சீன செய்தி சேவையால் வெளியிடப்படும் வாராந்திர பத்திரிகையான சைனா நியூஸ்வீக் தெரிவித்தது.
ஹெனான் யான்ஷன்பு கிராமத்தில் உள்ள யிங்காய் பள்ளியில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து ஜனவரி 19ஆம் தேதி இரவு 11 மணிக்கு உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று சின்ஹுவா செய்தி தெரிவித்தது.
உயிர்பிழைத்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று சின்ஹுவா தெரிவித்துள்ளது.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பள்ளியின் தலைவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா தெரிவித்தது.
யான்ஷான்பு கிராமம் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் வசிக்கும் நன்யாங்கின் புறநகரில் அமைந்துள்ளது. மாணவர் தங்கு விடுதியுடன் கூடி அந்தப் பள்ளி குறித்த அதிக தகவல்கள் இல்லை.
சீனாவில் பாதுகாப்புத் தரங்கள், மோசமான அமலாக்க முறை காரணமாக தீ மற்றும் பிற மோசமான விபத்துகள் ஏற்படுவது சகஜமாக உள்ளது.
நவம்பர் மாதம், வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஜூலை மாதம், நாட்டின் வடகிழக்கிலுள்ள பள்ளி ஒன்றின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.