பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டுபோனவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) பதினொன்றாக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள ஆழமான மண் மேடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டவர்களைத் தேடி மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டது. இருப்பினும், உறுதியற்ற நிலம் காரணமாக பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியை மேற்கொள்ள இயலாது என்று மீட்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை (ஜனவரி 22) காலை 5.51 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 18 வீடுகள் புதையுண்டன. அதில் காணாமல் போன 47 பேரில், எட்டுப் பேர் மாண்டுபோனதாக அறிவிக்கப்பட்டது. தலையிலும் உடலிலும் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மலைச்சரிவின் மேல்பகுதியில் உள்ள செங்குத்தான ஒரு பாறை விளிம்பில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.