காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மிகக் கடுமையான போரின் காரணமாக காஸாவின் தென்பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கின்றனர்.
பாலஸ்தீன இனப்படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் ஜனவரி 26ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இருப்பினும், போர் தொடர்கிறது.
இந்நிலையில், காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஆகப் பெரிய நகரமான கான் யூனிஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாத் தாக்குதல் காரணமாக அங்குள்ள இரண்டு பிரதான மருத்துவமனைகள் முடங்கிவிட்டன.
இதனால் மருத்துவ உதவி தேவைப்படும் ஆயிரக்கணக்கானோர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கான் யூனிஸ் நகரைக் குறிவைத்து இரவு நேரங்களில் இஸ்ரேல் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதாகத் அவற்றை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல்களில் மரணமடைந்தவர்களும் காயமடைந்தவர்களும் அங்குள்ள அல் அமால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன செம்பிறை மன்றம் கூறியது.
ஆனால், அந்த மருத்துவமனை நிலைகுலைந்த நிலையில், செயல்பட முடியாமல் இருப்பதாக அது தெரிவித்தது.
இனப்படுகொலை நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்த அனைத்துலக நீதிமன்றம், சண்டை நிறுத்தத்துக்கு உத்தரவிடவில்லை.
இதற்குச் சில பாலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், இஸ்ரேல் செய்வது மிகப் பெரிய தவறு என்று உலகம் முதல்முறையாகக் குரல் கொடுத்திருப்பதாக காஸாவில் தமது வீடு, உடைமைகளை இழந்து தவிப்போரில் ஒருவரான 42 வயது பாலஸ்தீனப் பெண் திருவாட்டி மஹா யாசின் கூறினார்.
“இந்த நான்கு மாதங்களில் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த கொடுமை இதற்கு முன்பு நடந்ததே இல்லை,” என்று தமது குமுறல்களை அவர் கொட்டித் தீர்த்தார்.
இதற்கிடையே, அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஏற்க மறுத்தார்.
அந்தத் தீர்ப்பு நியாயமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.