பொகோட்டா: கொலம்பியாவைச் சேர்ந்த 39 வயது மார்தா, ஏற்கெனவே 19 பிள்ளைகளுக்குத் தாய்.
இருப்பினும், தனது 20வது குழந்தையை இவ்வுலகுக்குள் கொண்டுவரக் காத்திருக்கிறார்.
குழந்தை பெற்றுக்கொள்வதைத் தான் நிறுத்தப் போவதில்லை என்று ஊடகப் பேட்டி ஒன்றில் கூறிய இவர், தாய்மையை ஒரு வர்த்தக வாய்ப்பாகக் கருதுவதாகக் கூறினார்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் கொலம்பிய அரசாங்கத்திடமிருந்து மார்தாவுக்கு நிதியுதவி கிடைக்கிறது. அதன்படி, மாதம் சுமார் 1984175 பெசோ (S$680) அவர் கைக்கு வருகிறது.
மேலும், சிறிய மூவறை வீட்டில் குடியிருக்கும் அவரின் குடும்பத்துக்கு அண்டைவீட்டாரும் உள்ளூர் தேவாலயமும் உதவிக்கரம் நீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிள்ளைகளுக்குக் குறைந்தபட்ச வசதிகளைக்கூட ஏற்படுத்தித் தர முடியவில்லை என்று அந்தத் தாயார் குறிப்பிட்டார்.
வயிறு நிறைய சாப்பிடவோ, சுகமாகத் தூங்கவோ முடியவில்லை என்றார் அவர்.
இருப்பினும், தன் உடல் அனுமதிக்கும் வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டே போக, தான் தயாராக இருப்பதாக மார்தா கூறினார்.
“நடைமுறை வாழ்க்கையில், ஓர் அம்மாவாக இருப்பதை நான் வியாபாரமாகப் பார்க்கிறேன்,” என்று அவர் கூறியதாக ‘டெய்லி மெயில்’ குறிப்பிட்டது.