ஜகார்த்தா: கத்தாரிடமிருந்து 733 மில்லியன் யூரோ (S$1.06 பில்லியன்) மதிப்பிலான மிராஜ்-2000-5 ரகப் போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை இந்தோனீசியா கைவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய அத்திட்டம் கைவிடப்பட்டது குறித்து இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் பிப்ரவரி 10ஆம் தேதி தகவல் வெளியிட்டார்.
ஆனால் அதன் தொடர்பில் மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
கடந்த ஜனவரி மாதம், நிதிச் சிக்கலால் 12 போர் விமானங்களை வாங்குவது தாமதமாவதாக அமைச்சு கூறியிருந்தது. தற்போது பயன்படுத்தப்படும் சுகோய், எஃப்-16 ரகப் போர் விமானங்களைப் புதுப்பிக்க இந்தோனீசிய ராணுவம் முயற்சி மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டது.
கத்தாரிடமிருந்து மிராஜ் போர் விமானங்களை வாங்கும் திட்டம் 2023ல் அறிவிக்கப்பட்டபோது, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட அவ்விமானங்கள் பழையவை என்று இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
எதிர்வரும் அதிபர் தேர்தல் வேட்பாளரான தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாந்தோவை இந்தப் போர் விமானம் வாங்கும் திட்டம் குறித்து அவரை எதிர்த்துப் போட்டியிடுவோர் விமர்சித்தனர்.
ஆனால் அந்த விமானங்கள் இன்னும் 15 ஆண்டுகள் நன்றாகச் செயல்படக்கூடியவை என்று அவர் பதிலளித்தார். புதிய போர் விமானங்கள் வந்துசேரும் வரை இத்தகைய விமானங்கள் இந்தோனீசியாவிற்குத் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.